“அதிமுகவில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்கிற தீர்மானம், பெரியகுளத்தில் நடந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியும் இதனையே வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டமன்றம் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி அடைந்து, அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. 

முக்கியமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்து உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது. 

குறிப்பாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே தங்களது செல்வாக்கை இழந்து உள்ளனர். 

மிக முக்கியமாக, 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றிய நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது. மாநகராட்சியில் மட்டும் திமுகவுக்கு 43.59 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 24 சதவீத வாக்குகளும் கிடைத்தது.

இந்த விவகாரம், அதிமுகவினர் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறி, பலவிதமாக பேசப்பட்டு வந்தது.

இவற்றுடன், கடந்த சில மாதங்களாக அதிமுக தொடர்ந்து தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருவது, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், “சசிகலா - தினகரன் ஒருபுறம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் மற்றொருபுறம் என்று, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணம்” என்றும், அதிமுக நிர்வாகிகள் பலரும் வாய்விட்டே கூறத் தொடங்கி உள்ளனர்.

இதனையடுத்து, அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் முன்னதாக நடைபெற்றது.

அதாவது, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் தான், அதிமுகவின் தேனி மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, “அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை எந்தவித நிபந்தனையும் இன்றி, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று, அப்போது வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை, வரும் 5 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டத்தில், தீர்மானமாக நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் தொடர்ச்சியாகவே, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, “அதிமுகவில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று, வெளிப்படையாகவே வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், “சசிகலாவை சேர்க்க சொல்வது கட்சியில்  குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று, எம்.எல்.ஏ. அருண் மொழித்தேவன், தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, “தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதவிவிலக வேண்டும்” என்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.