கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவொரு நிகழ்ச்சியும், மிக மிக எளிமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அரசின் கட்டளையாகவும் வேண்டுகோளாகவும் இருந்து வருகிறது. அப்படியான நிலையில், வரும் சனிக்கிழமை நாட்டின் சுதந்திர தினம் வருகின்றது. 

எப்போதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு, பள்ளிகள் அனைத்திலும் கொடியேற்றப்பட்டு, குழந்தைகளுக்கு மிட்டாய்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை கொரோனா காரணமாக, பள்ளி கல்லூரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொது இடங்கள், கட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் என சுதந்திர தினத்தன்று, அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றப்படும் வழக்கமும் உண்டு. இப்போது அனைத்துமே பொது தளர்வின் பேரில் இயங்கு வருகின்றது.

ஆகவே இந்த 74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.  இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரத் தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம்.

 இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பாக மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில¦, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதக்கங்கள் மற¦றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் எனவும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது