அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய தலம் ஆகும்.
 
ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா, ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

இந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்கிவருவது ராமேஸ்வரம். காசிக்கு நிகராக விளங்கும் இந்தத்தளத்திலுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இலங்கை மன்னர் பராக்கிரம பாகுவால் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், பின்னர் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிராகரத்துடன் உருவானது. மன்னர்களுக்குச் சொந்தமான கோயிலாக இருந்ததால், இந்தக் கோயிலில் பழைமைவாய்ந்த தங்கம், வெள்ளி, பவளம், முத்து, வைரம், வைடூரியம் உள்ளிட்ட 65 வகையான ஆபரணங்கள் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

விலைமதிப்பற்ற இந்த ஆபரணங்கள், கோயிலில் நடைபெறும் ஆடி, மாசி உள்ளிட்ட திருவிழாக்களின்போது சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும். இந்தநிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமான நகைகள் காணாமல்போனதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து கோயில் நகைகளை ஆய்வு செய்யவும், நகைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றனவா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கடந்த ஆண்டு கோயிலின் நகைகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டன. இவற்றுடன் கோயிலிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளியிலான பல்லக்குகள், தேர்கள் ஆகியவையும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் எடையும் சரிபார்க்கப்பட்டது.

அதன்படி ராமேசுவரம் கோவிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அனைத்து வகை ஆபரணங்களையும் சரிபார்த்து, நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் சாமிக்கு அணிவிக்கப்படும் அனைத்து வகையான ஆபரணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. திருவிழா காலங்களில் சாமி, அம்பாள் வலம் வரும் தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்களின் எடையும் சரிபார்க்கப்பட்டன.

இந்த ஆய்வில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அணிவிக்கும் பல்வேறு நகைகளின் எடை குறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகையக் கையாளக்கூடிய குருக்கள்கள், மணியம் உள்ளிட்ட 30 பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், எடை குறைவான நகைகளுக்கு ஈடாக ரூ.5,000 முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் திருக்கோயில் நிர்வாகம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இவர்களில் பணி ஓய்வுபெற்ற பணியாளர்களும் இருக்கிறார்கள்.

திருக்கோயில் இணை ஆணையரின் முழுப்பொறுப்பில் கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளில் எடைக் குறைவு ஏற்பட்டதற்கு கோயில் ஊழியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் அவர்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நடவடிக்கை கோயில் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து திருக்கோயில் அதிகாரி கூறுகையில்,``கோயில் நகைகளில் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்திருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்க நகைகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது வழக்கமான நடைமுறைதான்'' என்று கூறியிருக்கிறார்.

இருப்பினும், 12 லட்சம் வரை அபராதம் வருமென சொல்லப்படுகிறது என்பதால், இந்த எடை குறைவு, தேய்மானத்தால் ஏற்பட்டதா அல்லது நகைகள் திருடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை திருடப்பட்டது உறுதியானால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கபடுகிறது.