'இங்குள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களா?' கொந்தளித்த நடிகர் ராஜ்கிரண்..
By Arul Valan Arasu | Galatta | 03:24 PM
“இங்குள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களா?” என்று நடிகர் ராஜ்கிரண் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில், “இங்குள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கருத்தில், “பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாகப் புளித்துப்போன விசயம். இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும்,
பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான, நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.
இந்த பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்து விட முடியாது.
இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள்.
இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற, இன்ன பிற கொடுமைகளால், அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து, சுய மரியாதையைப்பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழி வகுத்துத்தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு
மாறியவர்கள்.
ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது, அவனவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை 'இந்திய அரசியல் சாசன சட்டம்' உறுதி செய்திருக்கிறது.
ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா, அதே போலத்தான் இதுவும். எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே.
என் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மறவர் குலம்.
என் தாயாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.
எனது மூதாதையர் காலத்தில், சேதுபதிச்சீமையில், பள்ளு, பறை என்று 18 சாதிகள் இருந்தனவென்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி, சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக் கொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.
அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு. பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு” என்று, மனித நேயத்தை பறைசாற்றும் விதமாக பதவிட்டு, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.
இதனிடையே, நடிகர் ராஜ்கிரணின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.