முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டின் முன்று அவரது ஆதரவாளர்கள் பெரும் அளவில் திருண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி  உள்ளிட்ட உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில்0 இன்று அதிகாலை காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரெய்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வௌயப்பட்டுள்ளது. 

அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் சொத்து சேர்த்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இப்படியாக, வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும்,  விஜயபாஸ்கர் மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

அத்துடன், இந்த லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி, விஜயபாஸ்கர் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்துள்ளார் என்றும், இந்த அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கல்லூரி என மொத்தம் 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார் என்கிற தகவல்களும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், சி.விஜயபாஸ்கர் தனது பதவிக்காலத்தில் 6.6 லட்சம் ரூபாய்க்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. வாங்கி இருக்கிறார் என்றும், ஒரு அமைச்சராக இருந்த போது 53 லட்சம் ரூபாய்ககு பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்படுகின்றன. 

அதே போல், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் அவர் வாங்கி உள்ளார் என்றும், காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு விவசாய  நிலங்களை வாங்கி உள்ளார் என்றும், லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் 15 கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றையும் அவர் வாங்கி உள்ளார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

மேலும், அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை 28 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் என்றும், அமைச்சராக இருந்த போது தான் மற்றும் மனைவி, 2 மகள்கள் பெயரில் 58 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து உள்ளார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

அதே போல், வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டில் விஜயபாஸ்கர் வருமானம் 58.65 கோடி ரூபாய் என்றும் காட்டப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக் கடன், காப்பீட்டுத் தொகை என 34.5 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளார் என்றும், விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் கடந்த 5 ஆண்டுகளில் செலவு போக 24 கோடி ரூபாய் மட்டுமே சேமித்து இருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 

இப்படியாக, வருமானத்தை மீறி 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இந்த ரெய்டு குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்படும் சோதனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர் குற்றமற்றவர் என நிரூபித்து காட்டுவார்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். 

இதனிடையே, “சி.விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா உள்ளதாக” அவரது தரப்பு வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்து உள்ளார்.