ரத்தாகிறதா நாடாளுமன்ற கேள்வி நேரம்?

ரத்தாகிறதா நாடாளுமன்ற கேள்வி நேரம்? - Daily news


கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றம் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகிறது.

சமூக இடைவெளியுடன் கூடிய கூட்டத்தொடராக நடைபெறும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு 16 சட்ட திருத்தங்கள் நான்கு புதிய சட்ட மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று, புலம்பெயர் தொழிலாளர்கள், சீன எல்லைப் பிரச்சினை, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வழங்காமை, இந்தியாவின் ஜிடிபி பாதாளத்திற்கு சென்றது ஆகியவை பற்றியும் மற்றும் பல மக்கள் பிரச்சினைகள் பற்றியும் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன
 
ஆனால் இந்த கூட்டத்தொடரில் அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்கும் கேள்வி நேரத்தை ரத்து செய்திருப்பதாக ராஜ்யசபா செயலகத்தை மேற்கோள்காட்டி ஏ. என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று (செப்டம்பர் 2) செய்தி வெளியிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி டெரிக் பிரைன் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு பதினைந்து நாட்கள் முன்னதாகவே எம்.பி.க்களிடமிருந்து கேள்விகள் பெறப்படும்.

ஆனால் இந்த முறை 1950 ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெரிகிறது. பெரும் தொற்றை காரணம் காட்டி ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்படுவதை மன்னிக்க முடியாது. எதிர்க் கட்சி எம்பிக்கள் தாங்கள் கேள்வி கேட்கும் உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந்தேதி தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது. முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மட்டுமின்றி, இரு அவைகளின் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் கேள்வி நேரம், தனி நபர் தீர்மானம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜீரோ அவர் மற்றும் பட்டியலிடப்பட்ட மற்ற அவை நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறும் என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா கால கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பாக மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
 

Leave a Comment