தாலி கட்டும் நேரத்தில் மின் தடை ஏற்பட்ட காரணத்தால், மணமகன்கள் இருவர், தங்களது மணப்பெண்களை மாற்றி மாற்றி திருமணம் செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு “நிகிதா, கரிஷ்மா” என இரு மகள்கள் உள்ளனர்.

இந்த சூழலில் தான், “இந்த இரு மகள்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க” அவரது தந்தை ரமேஷ் லால் ஆசைப்பட்டு உள்ளார்.

அதன்படி, அந்த பகுதிகளைச் சேர்ந்த இரு வேறு குடும்பங்களை சேர்ந்த கணேஷ் மற்றும் தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்களை முறைப்படி பேசி திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து உள்ளனர். 

இதனையடுத்து, ரமேஷ் லாலின் 2 பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க, தந்தை ரமேஷ் முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அதன் படி, திருமண நாளான நேற்றைய தினம் திருமணம் தொடர்பான சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

அப்போது, மணமகன்கள் இருவரும் தங்களுக்கான பெண்ணிடம் தாலி கட்ட தயாராகிக்கொண்டு இருந்தனர். 

அந்த நேரம் பார்த்து, திடீரென்று அங்கு மின்தடை ஏற்பட்டு உள்ளது. ஆனால், முகூர்த்த நேரம் சென்றுவிடக்கூடாது என்று அந்த திருமண நிகழ்வின்போது, மணப் பெண்கள் இருவரும் முக்காடு போட்டிருந்ததோடு, ஒரே மாதிரியான ஆடைகளும் அணிந்திருந்தனர். 

இதனால், திருமண சடங்குகள் நடைபெறும் போது இருட்டில் மணப்பெண்கள் இருவரும் மாறியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, மணப்பெண்கள் இருவரும் ஒரே நிற ஆடையில் தாலி கட்டிக்கொள்ளும் முன்பு, அங்குள்ள அக்னியைச் சுற்றி வந்து உள்ளனர். அப்போது, மந்திரத்தை ஓதிக்கொண்டிருந்த பண்டிதரும் இதனை கவனிக்காமல், மணப் பெண்களை மாற்றி சுற்றி வரும் படி கூறி உள்ளார். 

அதன்படி, மணமகன்கள் இருவரும், அந்த இரு மணப்பெண்களின் கழுத்தில் தாலி கட்டி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருமணம் முடிந்து அந்த இரு பெண்களும், தங்களது கணவன் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்படி, கணவன் வீட்டிற்கு சென்ற பிறகு தான், தாங்கள் போட்டிருந்த முக்காடை அவர்கள் அகற்றி உள்ளனர். 

அப்போதுதான் “மணப்பெண் மாறியதும், மணமகன்கள் இருவரும் மணப்பெண்ணை மாற்றி தாலி கட்டியதும்” தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மணப்பெண் தரப்பினரும், மணமகன் தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

அத்துடன், “எப்படி மணமகள் மாறினார்கள்?” என்ற குழப்பம் ஏற்பட்டு, பெண் வீட்டாருடன் மணமகன் தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதரிடம் கூறிய போது, “மீண்டும் ஒரு முறை சடங்கை நடத்திவிடலாம்” என்று கூறி, மீண்டும் திருமண சடங்கை அவர் நடத்தி வைத்தாரிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, தாலி கட்டும் நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடையால் மணமகன் இருவரும், மணமகளை மாறி மாறி திருமணம் செய்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.