திருச்சி மாவட்டத்தில் நாளை 1,569 மையங்களில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

polio

ஆட்சியர் சிவராசு  இதுகுறித்து அவர் வெயியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்: திருச்சி மாவட்டத்தில் நாளை தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த 13.01.11 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை. தொடர்ந்து இந்த நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கும், போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கும் இந்த முறையும் மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.  திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1,279 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 20 மைங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து ஆரம்ப சுகதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நாளை அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. திருச்சி மாமநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலா தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு, 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து  ரயில்களில் நாளை ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை கிராமப்புறங்களில் 1,51,608 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 83,156 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 2,34,764 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இடம்பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 382 பேர்களுக்கும், நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆக மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 2,35,146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், நாளை நடைபெறும் முகாமில் கட்டாயம் சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கும். எனவே தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்துச் சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்வதாக, ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.