“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருவதால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தமிழக மக்களிடம் உரையாற்றி உள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளை முன்னிட்டு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களிடம் உரையாற்றினார். 

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்லவேண்டு என்றால் அவமானமாக இருக்கிறது” என்று, வேதனையோடு குறிப்பிட்டு உள்ளார். 

“அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது என்றும், இருக்கவும் கூடாது என்றும், விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “பள்ளிகளில் கல்லூரிகளில் பணிபுரியும் இடங்களில் பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், அதில் சில சம்பவங்கள்தான் வெளியில் வருகிறது மற்றவை அப்படியே மறைக்கப்படுகிறது” என்றும், வேதனையோடு அவர் கூறியுள்ளார். 

“அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு படத்தில், மனச்சாட்சி உறங்கும் சமயம் பார்த்துத்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது என்று எழுதினார். 

அப்படி மனச்சாட்சியற்ற மனிதர்களால் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனைத் தடுக்க முடியாது” என்றும், அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும், “உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகச் செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன என்றும், அந்தச் சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இத்தகைய நபர்கள் கடுமையாக கண்டிக்கப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றும், தெரிவித்து உள்ளார். 

“இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன் வர வேண்டும். பள்ளியின் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்களிடம் சக அதிகாரிகளிடம் நிர்வாகத்திடம் புகார்களைத் தர வேண்டும் என்றும், அந்தப் புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக் கூடாது” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

முக்கியமாக, “புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்று பள்ளி நிர்வாகமும்  தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரும் நினைக்கக் கூடாது” என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் “அப்படிச் செய்தால் அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாக ஆகிவிடும்” என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

“பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார் என்றும், உடல் வலியோடு உள்ளத்து வலியும் ஏற்படுகிறது என்றும் இதனால் அவர் அவமானம் அடைகிறார்” என்றும், குறிப்பிட்டு இருக்கிறார். 

“ஊக்கம் குறைகிறது, நம்பிக்கை தளர்ந்து போகிறது, சக மனிதர்கள் மீதே வெறுப்பு வளர்கிறது, ஆண்கள் மீதே கோபம் அதிகம் ஆகிறது, கல்வியிலோ வேலையிலோ கவனம் செலுத்த முடியாதவராக ஆகிறார்” என்றும், முதலமைச்சர் கவலையோடு கூறியுள்ளார்.

“அந்த பெண்ணின் அனைத்துச் செயல்பாடுகளுமே இதனால் தடைபட்டு, அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகிறது என்றும், இத்தகைய சரிவுகளில் இருந்து பெண் குலத்தை காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே போல், “இதை மற்ற அனைத்துப் பிரச்னைகளையும் விட, மிக முக்கியமான பிரச்னையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது என்றும், பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், நீங்களே கடந்த சில நாட்களாக அதனைச் செய்திகளில் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். 

“உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர இந்த அரசு தயங்காது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களிடம் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.