சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அருகில் உள்ள 4 வீடுகள் தரைமட்டமாகின.

gas

சேலம் மாநகரம் 57-வது கோட்டத்திற்குட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். இவர் தீயணைப்புத்துறை சிறப்பு நிலை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில், பத்மநாபன் வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது, திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டது. 

5 வீடுகளில் வசித்த சுமார் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வெங்கட்ராஜன் (62), இந்திராணி (54), மோகன்ராஜ் (40), நாகசுதா (30), கோபால் (70), தனலட்சுமி (64), சுதர்சன் (6), கணேசன் (37), உஷாராணி (40), லோகேஷ் (18), கோபி (52) ஆகியோரை மீட்டு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கார்மேகம், ‘இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கோவை, அரக்கோணத்தில் இருந்து அதிநவீன கருவிகளுடன் மீட்பு படையினரும், கடலூரிலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சிலிண்டர் வெடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: வீட்டில் வணிக நிறுவன பயன்பாட்டு சிலிண்டரை பயன்படுத்தி பலகாரங்கள் செய்தபோது, சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் வீடுகள் சேதமாகி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் பாதுகாப்பின்றி வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பாக ஆய்வு செய்து முறையான பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அவைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கத்தக்கதாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து குறித்து, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.