நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் தான் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்.

dmk it wing

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற போது பெரும் கவனத்தை பெற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். நிதித்துறை அமைச்சராக பதவியேற்ற அவருக்கு சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ளது. மிகப் பொருத்தமான நபர்களை தேர்வு செய்தததற்கு ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன. திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக 2017-ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார்.

திமுக அரசு பொறுப்பேற்றதுமே நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் அதிக அளவு பேசப்பட்டவர் அநேகமாக பிடிஆராகத்தான் இருக்கும். மத்திய அரசையும், முந்தைய அதிமுக அரசையும் ஏராளமான கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டவரும் பிடிஆராகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு இவரது செயல்பாடுகள் மக்களை கவனிக்க வைத்தன.

தற்பொழுது தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பட்டும் வருகிறார். இந்நிலையில்  அந்த பொறுப்புடன் சேர்த்து இவர் திமுக கட்சி பதவியிலும் இருந்து வந்தார். திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார். 

இந்நிலையில் இந்தப் பதவியை தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தற்போது நிதியமைச்சராக இருந்து வரும் பழனிவேல் தியாகராஜனுக்கு பணிச்சுமைகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் ஜிஎஸ்டி கவுன்சிலிலும் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வருவதால் அவருடைய பணிகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்  இதன் காரணமாக அவரால் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு சரியாக நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. இது தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்சியின் தலைமையிடத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

மநீமய்யத்தில் இருந்து வந்த கோவை மகேந்திரனை, பிடிஆரின் ஐடி டீமிலேயே நியமித்தது திமுக மேலிடம். மகேந்திரனுக்கு திமுக ஐடி விங்க் அணியின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கியது.. திமுகவின் ஐடி விங்க் செயலாளராக பிடிஆர் இருந்தபோதிலும், அவரது பணி சுமையை குறைக்கும் பொருட்டு மகேந்திரனை நியமித்தது.. இதுவும் பிடிஆருக்கு அதிருப்தியை தந்ததாக சொல்கிறார்கள்.

மேலும் இதற்கு அடுத்தபடியாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டார். மற்ற துறைகளுக்கு ஆலோசகர்களை நியமிக்காதபோது, ஐடி விங்குக்கு எதற்காக ஆலோசகர் நியமிக்க வேண்டும் என்ற வருத்தமும் பிடிஆருக்கு இருந்துள்ளதாக தெரிகிறது.. இதுபோன்ற காரணங்களுக்காகவே தன் பதவியை ராஜினாமா செய்ய பிடிஆர் தயாரானாகவும், ஆனால் அந்த ராஜினாமா பற்றி திமுக மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து மேலும் கட்சி சார்பில் அந்த பதவிக்கு புதிய நபரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி திமுகவின் அடுத்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக டிஆர்பி ராஜா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. மூன்று முறை மன்னார்குடியிலிருந்து தேர்வாகியுள்ள அவர் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதன்முதலாக அதிமுக கட்சி தொடங்கியது. 2014-ம் ஆண்டு அதிமுக இதை தொடங்கியது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் திமுகவும் 2017-ம் ஆண்டு தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கியது. அப்போது முதல் அந்த அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வர இந்த தொழில்நுட்ப பிரிவும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனினும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தொழில்நுட்ப பிரிவில் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இந்தப் பிரிவிற்கு புதியவரை செயலாளராக நியமித்து மீண்டும் அதன் முழு செயல்பாட்டை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.