சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ஒரே வாரத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

omicron

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கடந்த 17-ம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி டாக்டர்கள், நர்சிங் மாணவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் என கடந்த 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 68 பயிற்சி டாக்டர்கள், 227 நர்சிங் மாணவிகள், 60 துப்புரவு பணியாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த 60 பேரில் 7 பயிற்சி டாக்டர்கள், 7 நர்சிங் மாணவர்கள், 3 நர்சுகள், 1 முதுகலை மருத்துவ படிப்பு மாணவர், 1 துப்புரவு பணியாளர்கள், அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் என மொத்தம் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே மற்றும் ஐதரபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.