6 மாதமாக, இந்திய சீன எல்லையில் ஒரு ஊடுருவல் கூட இல்லை! - மாற்றி மாற்றி பேசுகிறதா உள்துறை அமைச்சகம்?

 6 மாதமாக, இந்திய சீன எல்லையில் ஒரு ஊடுருவல் கூட இல்லை! - மாற்றி மாற்றி பேசுகிறதா உள்துறை அமைச்சகம்? - Daily news

கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.  வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், தென் இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
 
கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 122 பேரில் பெரும்பாலனோர் கேரளாவை சேர்ந்தவர்கள். ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பாடுகள் கேரளாவில் தான் அதிகளவில் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
தென் இந்தியாவை தவிர மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 112 என்கவுன்டர்கள் காவல்துறை நடத்தி உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு நாளைக்கு 5 பேர் காவல்துறை விசாரணையின் போது  உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 30 வரை  காவல்துறை விசாரணையில் 1,697 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,584 பேர் நீதிமன்ற காவலில் போதும், 113 பேர் காவல்துறை கஸ்டடியிலும் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற காவலின் போது 400 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக  மத்தியப் பிரதேசத்தில் 143 பேரும், மேற்கு வங்கத்தில் 115 பேரும், பீகாரில் 105 பேரும் பஞ்சாப்பில் 93 பேரும் மகாராஷ்டிராவில் 91 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவற்றோடு சேர்த்து, இந்தியா- சீனா எல்லையில் கடந்த 6 மாதங்களில் ஒரு ஊடுருவல் கூட நடைபெறவில்லை என மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ஜூலை மாதத்தில் 11 முறையும், மே மாதத்தில் 8 முறையும், மார்ச் மாதத்தில் 4 முறையும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாவும், ஜூன் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊடுருவல் முயற்சி நடைபெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் நிதர்சனத்தில் இந்தியா சீனா எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியாவுக்கு உள்பட்ட இடத்தை சீனா ஆக்கிரமித்து இருந்தது. இதை நேற்று பகிரங்கமாக ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டு இருந்தார். சுமார் 38.000 சதுர கி. மீட்டர் தொலைவுக்கான இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று அவர் இதே மக்களவையில் தெரிவித்தும் இருந்தார். இத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலப்பரப்பை ஆக்கிரமித்து சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வார்த்து இருந்தது குறித்தும் குறிப்பிட்டு இருந்தார் அவர். மேலும், இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றார். அப்படியிருக்கும்போது, ஊடுருவலே இல்லையென்ற என்ற இன்றைய அறிவிப்பு, மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது

Leave a Comment