மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று மலர் தூவி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கடைமடை வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேர அரசு நடவடிக்கை” எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Next lockdown is just rumour - CM Palanisamy

அப்போது, “மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, “மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி” என்று குறிப்பிட்டார்.

“தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் கூறினார். 

மேலும், “கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” என்று கவலைத் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, “பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை” என்றும் குறிப்பிட்டார். 

“பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள் என்றும், அரசுக்கு தயவுசெய்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

Next lockdown is just rumour - CM Palanisamy

“அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விடத் தமிழகத்தில் குறைவு தான்” என்றும் முதலமைச்சர் கூறினார்.

“8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்றும், இதற்குத் தமிழக அரசு உதவி தான் செய்கிறது” என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, “ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக, “கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதிப்படக் கூறினார்.