முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் அக்டோபர் 21-ம் தேதி  தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன் மூலம் தமிழகத்துக்கு முதலீடுகளைக் கொண்டுவருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதுவரை, தமிழக முதல்வரின் தலைமையில் இரண்டு உயர்மட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 15,000 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் முதல்வரின் தலைமையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 25,213 கோடி ரூபாய் அளவுக்கான தொழில் முதலீடுகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து, சுமார் 49,003 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இன்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமான திட்டங்கள் ஈ.என்.இ.எஸ் டெக்ஸ்டைல் மில் (ராம்ராஜ்) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மோபிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Seoyon E-HWA Automotive India Private Limited நிறுவனத்தின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி திட்டம், Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Ather Energy நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் ஆகியவையாகும். இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை இனங்கள், தொழில் தோழன் தகவு மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடர்புடைய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.