பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி  உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் செயல்படும் 1354 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கு, கல்லூரி விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகள் என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2011 ஜூலை 9-ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இத்துறையின் ஆய்வு கூட்டத்தில் விடுதி மாணவ- மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவு கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிதாக உணவு பட்டியல் தயாரிக்கும் பணி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின், கருத்துருவில் கல்லூரி பள்ளி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு, இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்பிளைட் நியூட்ரிஷியன் பரிந்துரைத்துள்ள பட்டியலின் அடிப்படையில் காலை, மதியம், இரவு சிறப்பு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் அட்டவணைப்படுத்தி மாதாந்திர உணவு கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் திருத்தப்பட்ட உணவு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காலை உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திங்கள்கிழமை சேமியா கிச்சடி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் , செவ்வாய்க்கிழமை பூரி மசாலா,  புதன்கிழமை இட்லி, சாம்பார், சட்னி, வியாழக்கிழமை இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய்ப்பால், வெள்ளிக்கிழமை பொங்கல், வரகு பொங்கல் /தினை பொங்கல்/ அரிசி பொங்கல், கத்தரிக்காய் கொத்சு, வடை, சனிக்கிழமை ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, ஞாயிற்றுக்கிழமை தோசை /நவதானிய தோசை/ சாம்பார், சட்னி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மதியம் திங்கட்கிழமை சாதம், சாம்பார் ,இரு வகை பொரியல், ரசம்,மோர், முட்டை / சாதம், சாம்பார், ஒரு பொரியல், ரசம், மோர், முட்டை மசாலா, செவ்வாய்க்கிழமை காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை , புதன்கிழமை சாதம் ஆட்டிறைச்சி அல்லது கோழி குருமா அல்லது மட்டன் சிக்கன் குழம்பு, பொரியல், மோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.