காதலிக்கு வேறு ஒரு இடத்தில் திருமண நிச்சயம் ஆன கோபத்தில், காதலியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து, அந்த காதலி ஏற்கனவே எழுதிய கவிதையுடன் சேர்ந்த்து ஊர் முழுக்க அந்த காதலன் போஸ்டராக ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்து உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் விஜய்ரூபன் என்பவர், அங்குள்ள களக்காடு பகுதியில் “லவ் பேர்ட்ஸ்” விற்பனை செய்யும் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். 

இந்த சூழலில் தான், தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அங்குள்ள களக்காடு நகராட்சி 2 வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், விஜய்ரூபன் படுதோல்வி அடைந்தார்.

அத்துடன், இளைஞனான விஜய்ரூபன் தனது தூரத்து உறவினரின் பெண்ணான அங்குள்ள மேலபத்தை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளார். 

அந்த பெண்ணின் தந்தையிடம் திருமண செய்ய பெண் கேட்டு அவர் சென்று உள்ளார். ஆனால், அவர், தனது மகளை விஜய்ரூபனுக்கு திருமணம் செய்து கொடுக்க அதிரடியாக மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விஜய்ரூபன், கடும் ஆத்திரமடைந்ததுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.

இந்த நிலையில் தான், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, விஜய்ரூபன் காதலித்து வந்த அந்த இளம் பெண்ணிற்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய நிச்சயத்தார்த்தம் நடந்து உள்ளது. 

இந்த விசயம் விஜய்ரூபனுக்கு எப்படியோ தெரிய வந்த நிலையில், ஏற்கனவே கடும் மன உளைச்சலுலில் இருந்த விஜய்ரூபன், தனது காதலியுடன் இதற்கு முன்பாக ஜோடியாக எடுத்துக்காண்ட போட்டோக்களை வைத்தும், அவர் இதற்கு முன்பு எழுதி அனுப்பிய காதல் கடிதங்களில் இடம் பெற்ற கவிதைகளை கொண்டும், பெரிய அளவில் போஸ்டர் அடித்து, களக்காடு நகர் பகுதி முழுவதிலும் போஸ்டராக ஒட்டி உள்ளார். 

முக்கியமாக, அந்த பெண்ணிற்கு நிச்சயம் செய்த மாப்பிளையின் வீட்டின் முன்பும் அந்த போஸ்டரை விஜய்ரூபன் ஓட்டி உள்ளார். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை மற்றும் மாப்பிள்ளை வீட்டார், அங்குள்ள களக்காடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனால், விஜய்ரூபன் தலைமறைவானார். இதனால், தலைமறைவாக இருக்கும் விஜய்ரூபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும், இச்சம்வம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.