பிரதமர் மோடியின் தமிழக வருகையால், கிட்டதட்ட 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய தினம் சென்னை வருகிறார். 

இன்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்கின்றனர்.

இதனையடுத்து, பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். அப்போது, செல்லும் வழி எங்கும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

முக்கியமாக, பிரதமர் மோடியின் இந்த தமிழக வருகையில், கிட்டதட்ட 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, அவர் இன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்

- மதுரை - தேதி அகல ரயில்பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
  மதுரை - தேதி அகல ரயில்பாதை திட்டமானது 75 கிலோ மீட்டர் தூரம் என்றும், இது 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் என்றும், கூறப்படுகிறது.

- தாம்பரம் - செங்கல்பட்டு ரயில்பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டமானது, சென்னை புறகர் ரயில் 3 வது பாதையில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு 590 கோடி ரூபாய் ஆகும்.

- எண்ணூர் - செங்கல்பட்டு இடையே குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுச் செல்லும் திட்டம். இந்த திட்டத்தின் தூரம் 115 கிலோ மீட்டர் என்றும், இந்த திட்டத்தின் மதிப்பு 850 கோடி ரூபாய் என்றும், கூறப்படுகிறது.

- திருவள்ளூர் - பெங்களூரு இடையே குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுச் செல்லும் திட்டம். இந்த திட்டத்தின் தூரம் 271  கிலோ மீட்டர் என்றும், இந்த திட்டத்தின் மதிப்பு 850 கோடி ரூபாய் என்றும், கூறப்படுகிறது.

- பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் சென்னை கலங்கரை விளக்கம் அருகில் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுள்ள 1152 வீடுகள் அர்பணிப்பு திட்டம்.

- சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டம். இந்த திட்டத்தின் தூரம் 262 கிலோ மீட்டர் என்றும், இந்த திட்டத்தின் மதிப்பு 14,870 கோடி ரூபாய் என்றும், கூறப்படுகிறது.

- சென்னை துறைமுகம் - மதுரவாயல் 4 வழி சாலை திட்டம். இந்த நான்கு வழி பறக்கும் சாலை திட்டத்தின் மொத்த மதிப்பு 5,850 கோடி ரூபாய் ஆகும்.

- தர்மபுரி - நெரலூரு நான்கு வழிப்பாதை திட்டம். இந்த திட்டத்தின் தூரம் 94 கிலோ மீட்டர் தூரமாகுமு். இந்த திட்டத்தின் மதிப்பு 3,870 கோடி ரூபாய் ஆகும்.

- மீன்சுருட்டி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை திட்டம்.  இந்த திட்டத்தின் தூரம் 31 கிலோ மீட்டர் என்றும், இந்த திட்டத்தின் மதிப்பு 720 கோடி ரூபாய் என்றும், கூறப்படுகிறது.

- சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமாரி, ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம். இந்த திட்டத்தின் மதிப்பு 1,800 கோடி ரூபாய் ஆகும்.

- திருவள்ளூர் மாவட்ட மப்பேட்டில் மன்முனை சரக்கு பூங்கா திட்டம். இந்த திட்டத்தின் பரப்பளவு 159 ஏக்கர் ஆகும். இந்த திட்டத்தின் மதிப்பு 1,430 கோடி ரூயாய் ஆகும்.