“அரச வன்முறையை ஏவிவிட்டு அப்பாவி விவசாயிகளைத் தாக்குவதும், சுட்டுக்கொல்வதுமென ஈவிரக்கமற்ற கோரச்செயல்களை நிகழ்த்துவது கொலைவெறி பிடித்த பாசிச ஆட்சியின் உச்சம்” என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

அத்துடன், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னும் பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் கைது செய்யப்படாத நிலையில், ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் மிக கடுமையான கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.

அந்த வகையில், இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “உத்திரப் பிரதேசத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, தனது வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றியதிலும், காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளரென 9 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“அதிகாரத் திமிரில் அரசப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு, உணவளிக்கும் விவசாயிகளைக் கொன்றொழித்த இக்கொடுஞ்செயல் ஒட்டுமொத்த நாட்டையே வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது” என்றும், அவர் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

“விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவோமென வாக்குறுதி அளித்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த பாஜக அரசு, அரச வன்முறையை ஏவிவிட்டு அப்பாவி விவசாயிகளைத் தாக்குவதும், சுட்டுக்கொல்வதுமென ஈவிரக்கமற்ற கோரச்செயல்களை நிகழ்த்துவது கொலைவெறி பிடித்த பாசிச ஆட்சியின் உச்சமாகும்” என்றும், அவர் விமர்சித்து உள்ளார். 

“இதற்கு எனது கடும் எதிர்ப்பினையும், வன்மையானக் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்” என்றும், சீமான் கூறியுள்ளார்.

“மனிதத்தன்மையே அற்ற கொடுங்கோலர்கள் கைகளில் நாடும், மக்களும் சிக்குண்டு, நாளும் வதைபடுவதும், அரசின் வன்முறை வெறியாட்டத்துக்கும், படுகொலைகளுக்கு உள்ளாவதும் வெட்கக்கேடானது” என்றும், சீமான் கருத்து கூறியுள்ளார். 

“பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடம் சிக்குண்டிருக்கும் நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போரை சனநாயக வழியில் நடத்திட நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டியது வரலாற்றுப் பெருங்கடமையாகும்” என்றும், சீமான் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “இந்த கலவரத்திற்குக் காரணமான மத்திய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவி நீக்கம் செய்து, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும்,  ஆஷிஷ் மிஸ்ராவை கொலை வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றும், சீமான் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.