உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. நகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏழு தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். 

mkstalin

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மேலும் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது, மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், நகராட்சிகளில் 68.22 சதவீதமும், பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. 39.30 சதவீத மக்கள் ஓட்டுப்போடவில்லை. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான நேற்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஆனால், அதிகாலை 5 மணி முதலே வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்களும், முகவர்களும் வரத்தொடங்கினார்கள்.

முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. தபால் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டுகளே பயன்படுத்தப்பட்டிருந்ததால், ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து, அவை அந்தந்த வேட்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. அப்போதே, தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு, வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 இடங்களில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆரம்பம் முதல் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு முதன் முதலில் முடிவுகள் அறிவிக்கப்பட தொடங்கின. தொடர்ந்து நகராட்சி, மாநகராட்சி பகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது. பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தி.மு.க. 153, அ.தி.மு.க. 15, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, ம.தி.மு.க. 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பா.ஜனதா 1, அ.ம.மு.க. 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 இடங்களை பிடித்தன. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றன.

பல காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. கால்பதித்து வரலாற்று சாதனை படைத்தது. அங்குள்ள பெரும்பாலான இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி அசத்தியது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் தி.மு.க. 132 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றியது. இதேபோல், 489 பேரூராட்சிகளில் தி.மு.க. 435 இடங்களையும், அ.தி.மு.க. 15 இடங்களையும், பா.ஜனதா 5 இடங்களையும், மற்றவை 25 இடங்களையும் பிடித்தது.

இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ரேணுப்பிரியா வெற்றி பெற்றார். அவரது கணவரும், நகர தி.மு.க. பொறுப்பாளருமான பாலமுருகன் 20-வது வார்டில் போட்டியிட்டார். அவரும் வெற்றி பெற்றார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 6-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பவித்ரா வெற்றி பெற்றார். இவருடைய கணவர் ஷியாம்ராஜா 40-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல 29-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கீதா வெற்றி பெற்றார். இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் ராஜா 30-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி 14-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக வெங்கடாஜலம் களம் இறங்கினார். இதே போல 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக அவருடைய மனைவி உமாமகேஸ்வரி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் கணவன், மனைவி 2 பேருமே வெற்றி பெற்றுள்ளனர்.

திருவாரூர் நகராட்சி தேர்தலில் 14-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த டி.செந்தில், 9-வது வார்டியில் போட்டியிட்ட இவருடைய மனைவி புவனப்பிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல் 1-வது வார்டு பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கலியபெருமாள், 2-வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரது மனைவி கவிதா, திருத்துறைப்பூண்டி நகராட்சி 3-வது வார்டில் போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க. வேட்பாளரை விட 115 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் தி.மு.க. சார்பில் 23-வது வார்டில் நீரோடி ஸ்டீபனும், 25-வது வார்டில் ஸ்டீபன் மனைவி ராணியும் வெற்றி பெற்றுள்ளனர்.