தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 

தொடர்ந்து பெய்த கனமழையால் சில பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 15 நாட்களுக்கும் மேலாக இருப்பளவு தண்ணீரில் மக்கள் பலர் சிரமத்தோடு வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

chennai rain

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

டிசம்பர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தற்பொழுது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். 

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்க கூடும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

chennai rain

நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

3 ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா மற்றும் ஓடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

4 ஆம் தேதி வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திரா , ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தெற்கு அந்தமான் பகுதியை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.