2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கட்சியின் செயற்குழு ஒருமனதாக கமல்ஹாசனை தேர்வு செய்துள்ளதாக துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில், முதல்வர் வேட்பாளராக கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் கூட்டணி குறித்து முடிவெடுக்க கமலுக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தி கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார். 

தமிழக தேர்தல் களம் எப்போதுமே கூட்டணியை அடிப்படையாக கொண்டதாகவே இருந்து வந்தது. கடந்த முறை கூட்டணியே இல்லாமல் ஜெயலலிதா வென்றதற்கு காரணம் திமுக வலுவான கூட்டணி அமைக்கத் தவறியது தான். இதே போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிரப்பு அலை இருந்த நிலையில் அதனை காங்கிரசுடன் கூட்டணி வைத்து திமுக முழுமையான வெற்றியாக அறுவடை செய்தது. அதே சமயம் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது.

ஆனால் கூட்டணி அமைப்பதில் இரண்டு தேசிய கட்சிகளும் தமிழகத்தில் மிக முக்கிய பங்காற்றின. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தலா ஒரு தேசிய கட்சி இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வாய்ப்புள்ளது. இதே போல் பாஜக அதிமுக கூட்டணியில் தொடரும் சூழல் தெரிகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பு உள்ளது. இதனை பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக கூறியுள்ளார். இதே போல் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் கூட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் வரை இருக்கும் என்று சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.

எனவே தமிழக அரசியலை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறிவிட முடியாது. அப்படியானல், கூட்டணி இனி தான் முடிவு செய்யப்படும். அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் இடத்தில் தினேஷ் குண்டுராவ் எனும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் இருக்கிறார். இவர் தான் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர். இதற்கு முன்பு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஷ்னிக் மாற்றப்பட்டு தினேஷ் குண்டுராவ் வந்துள்ளார்.

காங்கிரஸை பொறுத்தவரை மாநில ரீதியிலான அரசியல் விவகாரங்களை இறுதி செய்வது இந்த மேலிடப் பொறுப்பாளர்கள் தான். கூட்டணியை மேலிடம் உறுதி செய்தாலும் தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதியில் போட்டி என்பதை முடிவு செய்வது மேலிடப் பொறுப்பாளர்கள் தான். அந்த வகையில் கன்னடரான தினேஷ் குண்டு ராவ் தான் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கும் இடங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கப்போகிறவர். இதே போன்ற ஒரு நிலை தான் பாஜகவிலும் உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி குறித்தும் விரைவில் தீர்மாணிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.