தமிழக நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார
விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தமிழக சட்டப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். 

பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு முதல் முறையாக தனி பட்ஜெட்டும், இந்த முறை தாக்கல் செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன் படி, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.

பின்னர், பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், சட்டப் பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார், “தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால், அரசு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாக” சுட்டிக்காட்டினார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக அளித்த வாக்குறுதிகளை எக்காரணத்தைக்கொண்டும் நாங்கள் பின் வாங்க மாட்டோம்” என்று, உறுதிபட கூறினார். 

“பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் இருப்பதாக” குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “அது சரிசெய்யப்பட்டவுடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்

அத்துடன், “அதிமுக ஆட்சியில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று குறிப்பிட்டு பேசிய முதல்வர், “இலவச செல்போன் தருவதாக சொன்னீர்களே,
செய்தீர்களா? என்றும், பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என சொன்னீர்களே.. அமைத்தீர்களா? என்றும், அனைத்து இடங்களிலும் வைஃபை வசதி அமைத்தீர்களா?” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் படி பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நிலமில்லாத எத்தனை பேருக்கு நிலம் வழங்கினீர்கள்? என்றும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என சொல்கிறீர்கள்? என்றும், அவர் பதில் கேள்வியை முன் வைத்தார்.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பதில் அளித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, “ஏழ்மையானவர்களுக்கு மட்டுமின்றி, தகுதியுடைய அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்றும், குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.