கோவை வ.உ.சி. மைதானத்தில் ரூ.1324 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

stalin

கோவை வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ரூ 89.73 கோடி மதிப்பிலான  முடிந்த 128 பணிகளை திறந்து வைத்தார் . ரூ 596.02 கோடி மதிப்பில் புதிதாக  67 பணிகளை துவக்கி வைத்தார். மேலும் ரூ 441.76 கோடி மதிப்பிலன அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌. 

விழா நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெறவில்லை. வெற்றி வாய்ப்பை தவற விட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்கு தான் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுப்பாக நியமித்து இருக்கிறேன். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என இந்த அரசு செயல்படுகின்றது. திமுக அரசை பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு  அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டது. ஆட்சி அமைந்த அன்றே இதற்கு தனித்துறை அமைக்கப்பட்டது மேலும் இப்போதும் பலர் மனுக்களை கொடுத்து வருகின்றனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய திட்டங்களை விட, தனி மனிதனின் கோரிக்கைகள் நிறைவேற்றபடுவது தான் முக்கியம் எனவும் மேலும்  ஏராளமான திட்டங்களை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி என்றும் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்‌‌ மாநகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் திட்டசாலைகள் போடப்படவில்லை. 5 திட்டசாலைகளை அமைக்க 200 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கும் சிறைச்சாலை நகரின் வெளிப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என முதலவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் கோவை நகர்புற வளர்ச்சி குழுமம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கு அடித்தளமாக இருக்கும் மாவட்டம் கோவை. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் முதல் தொழில் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். நாளை தொழில் முதலீடு மாநாட்டில்  புதிய ஓப்பந்தங்கள் ஏற்படுத்தபடுகின்றது. மேலும் இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவையாக இருக்கும். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் எனது பணி இருக்கும்‌. அனைத்திலும் தலை சிறந்தமாவட்டமாக கோவை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  கோவையில்  நலத்திட்ட  உதவிகள்  வழங்கும்  விழா  முடிந்ததும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருப்பூர் செல்கிறார். மாலை 5 மணியளவில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். விழாவில், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவுற்ற பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.