மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு சித்தாலப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.

mkstalin

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிட்டார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச்சென்று மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்.

இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம், “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48” திட்டங்களின் பயனாளிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தினந்தோறும் சுய ‘டாயலிசிஸ்' சிகிச்சை செய்து கொள்வதற்கான திரவப்பைகளை பெற்றுவரும் சிறுநீரக செயல்பாடு இழந்த கடலூர் மாவட்டம் நங்குடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவன் பவின் உடன், முதல்-அமைச்சர் கலந்துரையாடினார். மேலும் விபத்தினால் கால்களை இழந்த சங்கீதா, முகமது ஷேக் அப்துல்லா ஆகியோருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால்களை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48” திட்டம் 18-12-2021 அன்று முதலமைச்சரால் தொடங்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 18-12-2021 முதல் இதுவரை தமிழ்நாட்டு சாலைகளில் வாகன விபத்துகளில் பாதிப்படைந்தவர்களில் 18 ஆயிரத்து 730 பயனாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 32 பயனாளிகள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் என மொத்தம் 21 ஆயிரத்து 762 பயனாளிகள் அவசரகால ஊர்தி சேவை திட்டத்தின் மூலம் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் இன்னுயிர் காக்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கோவையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமுற்று பல மணி நேரம் அதிதீவிர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த மோகன்குமார் என்ற கல்லூரி மாணவரிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” திட்டத்தின் மூலமாக இந்த மருத்துவ உதவிகளை வழங்கியமைக்காக முதல்-அமைச்சருக்கு அந்த மாணவா் நன்றி தெரிவித்துக்கொண்டார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எங்களது கடமை என்று முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் ‘108’ அவசரகால ஊர்தி சேவை திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ‘108’ என்ற எண்ணை தொடர்புகொண்டு இலவச தொலைபேசி மூலம் இந்த சேவையை பொதுமக்கள் பெற்று பயனடைகின்றனர். 1,303 எண்ணிக்கையிலான ‘108' அவசர கால ஊர்திகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சேவைகள் மேலும் துரிதமாக கிடைக்கும் வகையில், காலதாமதத்தை குறைத்திட புதிதாக 188 அவசரகால ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இதில் 4 வாகனங்கள் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஊட்டி, வால்பாறை, அரசூர் மற்றும் மோட்டம்பட்டி ஆகிய மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும். தற்போது கூடுதலாக 188 அவசரகால வாகனங்கள் இந்த சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், அதிக அளவில் பொதுமக்கள் பயனடைவதுடன், சேவைக்காக காத்திருக்கும் நேரமும், ஆஸ்பத்திரிக்கு சென்றடையும் கால அளவும் குறையும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அதிகாரி பி.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக்குழும இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.