தமிழக அமைச்சர் சேகர் பாபு மகள், காதல் திருமணம் செய்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் சேகர்பாபு, கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்பதில் பல அதிரடியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குட் புக்கில் அமைச்சர் சேகர் பாபு இடம் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் தான், அமைச்சர் சேகர் பாபுவின் மகள், திடீரென்று காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், “எனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்” என்று கேட்டு, பெங்களூரு போலீஸ் கமிஷனரை தேடிச் சென்று உள்ளார். 

அதன்படி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த்தை நேரில் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவின் மகள், அவரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்தார்.

இதனையடுத்து, அந்த கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபுவின் மகள், “என் பெயர்  ஜெயக்கல்யாணி. நான், அமைச்சர் சேகர்பாபுவின் மகள்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், தனது அருகில் நிற்பரை காட்டி “இவர், சதீஷ். நாங்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2 நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். 

நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் இந்த காதல் திருமணம் செய்துகொண்டோம” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “நாங்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியேறினோம், 3 நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து எங்கள் குடும்பத்தினர் பிடித்தனர். பிறகு, அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர். தற்போது திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ் உதவியுடன் அடைத்து வைத்தனர்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும், சதீஷின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர்களை போலீஸார் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர் என்றும், இதற்கு எல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்றும், அவர் செய்தியாளர்கள் முன்பு தெரிவித்தார்.

முக்கியமாக, “கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இருந்தோம்” என்று தெரிவித்த அவர், “அப்போது எனது தந்தை இவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார் என்றும், இவர் மீது தவறான புகார் அளித்து நிறைய வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

“அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும், நாங்கள் 3 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம் என்றும், தற்போது இங்கு வந்து நாங்கள் உதவிக்கேட்டிருக்கிறோம்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “என்னுடைய தந்தை அமைச்சராக இருப்பதால், தமிழக அரசோ அல்லது தமிழகத்தில் உள்ளவர்களோ இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன் வரமாட்டார்கள்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“இதற்காகவே, நாங்கள் இப்போது கர்நாடகா வந்துள்ளோம் என்றும், இங்குள்ள அரசிடம் எங்களுக்கு உதவ கோரிக்கை வைக்கிறோம்” என்றும், அவர் கூறிார். 

“எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதால் கர்நாடக போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கடந்த முறை வீட்டை விட்டு வெளியேறிய போது, சதீஷ் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய பார்த்தார்கள் என்றும், அவர் மீது ஏதேனும் வழக்குப் பதிவு செய்தால் நான் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று, நான் கூறியதால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை” என்றும், அவர் தெரிவித்தார். 

மிக முக்கியமாக, “இப்போது நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளோம். இதனால், இனி சதீஷின் குடும்பத்தில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அமைச்சர் சேகர்பாபு மகள் செய்தியாளர்கள் முன்பு கோரிக்கை விடுத்தார்.