இந்த வருடத்துக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கொரோனா பாதிப்பின் காரணமாக தாமதமானது. இந்தநிலையில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டசபையில் தீர்மானம் சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

 

இதற்கு கவர்னர் ஒப்புதல் தாமதமானதால் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த வாரம் கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

 

ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்குனரகம் செய்து வருகிறது. அரசு பள்ளியில் படித்த 300 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்திருப்பதால் ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

சுமார் 5 ஆயிரம் மருத்துவ இடங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இன ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

 

இந்த மாதம் 18-ந்தேதிக்கு முன்னதாக முதல்கட்ட கலந்தாய்வை தொடங்கவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடவும் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

7.5 சதவிகித முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலந்தாய்வு தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையி, ``திமுகவின் தொடர் போராட்டம் காரணமாக, 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக அரசு - தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி - பாஜவுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் - இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா - அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கி விட்டது. இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.

 

இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க வேண்டிய மிக முக்கியக் கடமையை அ.தி.மு.க. அரசு கண்ணும் கருத்துமாக மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.