தங்கை உறவு முறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி அடுத்த தாடூர் காலனியை சேர்ந்த அன்புராஜ் என்பவரின் மகன் 25 வயதான ராசுகுட்டி என்ற இளைஞர், சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இவரும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயதான உறவுக்கார பெண் கீர்த்தனாவும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், அந்த பெண் ராசுகுட்டிக்கு தங்கை முறை வரும் என்றும் கூறப்படுகிறது. இதனால், காதலர்கள் இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி பெரும் பிரச்சனை வெடித்து உள்ளது. 

ஆனால், இந்த எல்லா பிரச்சனைகளையும் மீறி காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, இரு வீட்டினரும் இருவரையும் பிரித்து அழைத்துச் சென்று உள்ளனர். 

இந்த சூழலில், கடந்த வாரம் ராசுகுட்டி, திருத்தணி கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், “நான் காதலித்து திருமணம் செய்த உறவுக்கார பெண் கீர்த்தனாவை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, கேட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து. ராசுகுட்டி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களை விசாரணைக்கு அழைத்த போது, பெண் வீட்டிலிருந்து யாரும் காவல் நிலையத்துக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், கடந்த வெள்ளிக் கிழமை அக்டோபர் 29 ஆம் தேதி வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிய ராசுகுட்டி, பின்னர் வீடு திரும்பவில்லை. எங்குத் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து ராசுகுட்டியை தேடி வந்தனர். 

இந்த நிலையில், பெரிய பாளையம் அருகே ஆரணி ஆற்றின் கரையில் உள்ள செங்காத்தாகுளம் பகுதியில் ராசுகுட்டி வெட்டுக்காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். 

இது குறித்த தகவலறிந்த பெரியபாளையம் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.