இந்திய அரசால் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, 100 இந்திய நிறுவனங்களில் ஒன்றாக சென்னையை சேர்ந்த மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராயிச்சி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

Yoga

“யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு இறுதியாக ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிடும் ஒரு கலையாகவே” திகழ்ந்து வருகிறது.

அத்துடன், இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் யோகா தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், ஆண்டு தோறும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வருடம் தோறும் ஜூன் 21 ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, யோகா நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யாமல், எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தான், இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு இந்தியாவின் 100 நிறுவனங்களில் ஒன்றாக, மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராயிச்சி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து “2022 யோகா மஹோத்சவத்தினை” உலகம் எங்கும் நடத்தி வருகின்றன. 

உலக யோகா தினத்தை முன்னிட்டு 100 நாட்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 

அந்த வகையில், யோகா ஆசிரியர்கள், யோகா நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் யோகாவை பெருமைப்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், பொது மக்களிடையே யோகா மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, உலகம் எங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. 

அதன்படி, தமிழகத்தில் இருந்து மட்டும் 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 

அதில், சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாக, தற்போது மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையை அடுத்து உள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா, கடந்த 28 ஆம் தேதி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 

Yoga

இந்த யோகா திருவிழாவில், பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, சமூக வலைத்தளம் மூலமாக கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலை சிறந்த யோகிகளால் வெகு சிறப்பாகவே நடத்தப்பட்டன. 

அத்துடன், யோகா திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.