தொடர்ந்து கல்யாண டார்ச்சர் கொடுத்து வந்த கள்ளக் காதலியை, காதலான போலீஸ்காரர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் அதுவும் மதுரையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பொன் பாண்டி என்பவர், தனது மனைவி சரண்யா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 8 வயதில் தக்‌ஷினா என்ற மகளும், 5 வயதில் சுதாக்‌ஷினா என்ற மகளும், உள்ளனர். 

இப்படியாக கணவன் - மனைவியாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் பொன் பாண்டி சாலை விபத்தில் எதிர்பாரத விதமாக உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, மதுரையில் சரண்யா வசித்து வந்த போது, கடந்த 2019 ஆம் ஆண்டில் போலீஸ் பணிக்கு தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி வகுப்பில் சேர்ந்து உள்ளார். அப்போது, அந்த பயிற்சி வகுப்புக்கு திருமுருகன் என்பவரும் வந்திருக்கிறார்.

இந்த பயிற்சி வகுப்பின் போது, திருமுருகனுக்கும் - சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம், நாளடைவில் அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, திருமுருகனுக்கு போலீஸ் வேலை கிடைத்து, அவர் மதுரை ஆயுதப்படையில் பணியில் சேர்ந்தார். ஆனால், சரண்யாவுக்கு போலீஸ் வேலை கிடைக்காத நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு வனத்துறையில் வேலைக்கு சேர்ந்தார்.

அதன் படி, சரண்யா தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக வேலைக்கு சேர்ந்தார்.

இதனால், சரண்யா தேனி மாவட்டம் போடி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

இதன் காரணமாக, சரண்யாவின் 2 மகள்களும் மதுரை யாகப்பா நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர். 

இப்படியாக, அந்த வீட்டில் சரண்யா தனியாக வசித்து வந்த நிலையில், சரண்யா வீட்டிற்கு அடிக்கடி வந்து காதலன் திருமுருகன், அவருடன் உல்லாசமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், நாளடைவில் இந்த காதல் விவகாரம், திருமுருகன் மனைவிக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் இரவு சரண்யா வீட்டுக்கு காதலன் திருமுருகன் எப்போதும் போல் வந்திருக்கிறார். 

அப்போது, காதலன் திருமுருகனிடம் “என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, காதலி சரண்யா வற்புறுத்தியதாக” கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், அப்போது கடும் ஆத்திரமடைந்த திருமுருகன், சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து மதுரைக்கு சென்று கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.