“தமிழ்நாட்டில் 90 சதவீத காவல் துறை அதிகாரிகள் ஊழல் வாதிகளாகவும், திறமை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது. 

அதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், தனக்கு சொந்தமான நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரை விசாரித்த போலீசார், “இது முற்றிலும் தவறான புகார்” என்று, கூறி, அந்த புகார் மனுவை முடித்து வைத்து உள்ளனர். 

இதனையடுத்து, அவர் நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதனை நாமக்கல் நீதிமன்றமும் ஏற்றது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வசந்தி, நாமக்கல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் மீது மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. 

அதன் படி, வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, “தவறான புகார்” என, இந்த வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தான், “ஆய்வாளர் பாக்கியலட்சுமி, உயர் நீதிமன்ற உத்தரவின் படி மறு விசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து அறிக்கை அளித்திருக்கிறார்” என்று கூறி, பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கானது, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “நில விற்பனை தொடர்பான சிவில் வழக்கு என்பதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்றும், இதனால் மறு விசாரணையும் உரிய முறையில் நடத்தப்பட்டது” என்றும், தனது தரப்பு வாதத்தை அவர் முன் வைத்தார். 

அத்துடன், “தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால், மன்னிப்பு கோருவதாகவும்” ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதிக்கவில்லை” என்று கூறி, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

ஆனால், “குறிப்பிட்ட நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்த போதே, விசாரித்திருந்தால் முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும்” என்றும், குறிப்பிட்ட நீதிபதி, “தற்போது காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல் வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று கூறி தனது கவலைத் தெரிவித்தார். 

குறிப்பாக, “10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் காவல் துறையில் உள்ளதாகவும்” கூறிய நீதிபதி, “ஊழல்வாதி உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது” என்றும், தனது உத்தரவில் வலியுறுத்தினார். நீதிபதியின் இந்த உத்தரவு, தமிழக போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.