தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இதையடுத்து, 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீஸூக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 25 ம் தேதி தீர்ப்பளிப்பதாக தெரிவித்தது.

 
தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு இதற்கான தீர்ப்பை வாசித்தது. அந்தத் தீர்ப்பில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்தனர். 

மேலும் `உரிமைமீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீஸில், அடிப்படை தவறுகள் உள்ளன. எனவே இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என்றும் நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமைக்குழு  திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மீண்டும் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, திமுக தலைமைக் கழகம் கடந்த செப். 12 வெளியிட்ட செய்தி வெளியீட்டில், "கடந்த 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த ஆக. 25 அன்று, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த செப். 7 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, ஜூலை 19, 2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, செப். 14 அன்று திமுக எம்எல்ஏக்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் திமுக எம்எல்ஏக்களை நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டப்பேரவையில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விவகாரத்தில் உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதத்தில், ``போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில் தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினையை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது”. எனத்தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அமீத் ஆனந்த் திவாரி வாதத்தில், “ஏற்கெனவே ஒரு பக்க சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ளா துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் குழுவில் இருக்கிறார்”.என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதத்தில், “ஸ்டாலினுக்கு எதிராக மட்டுமே உரிமைக்குழு தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் 18 பேருக்கும் எதிரான மனப்பான்மையுடன் உரிமைக்குழு இருப்பதாக கூறுவது தவறு. குழுவின் முன் இவர்கள் ஆஜராகவில்லை.

அங்கு வழக்கறிஞர்கள் ஆஜராகி செப்டம்பர் 24 வரை அவகாசம் பெற்றுள்ளனர். பேரவை விதி 226ன் அடிப்படையில் உரிமை மீறல் என பேரவை தலைவர் தானாக முன்வந்து உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கலாம். பேரவையில் நடந்தவற்றின் வீடியோ பதிவுகளை முழுமையாக பார்த்த பிறகுதான் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

குட்கா பாக்கெட்டை காண்பித்ததை பேரவை தலைவர் அனுமதிக்க முடியாது என பலமுறை கூறியுள்ளார். அதனால் இது உரிமை மீறல்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் கண்ணை உருட்டி, நாக்கை துறுத்தியதையும் உரிமை மீறலாக கருதி 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. பேரவை தலைவருக்கு பரிந்துரை மட்டுமே செய்யும். பேரவை தலைவர் தான் முடிவெடுப்பார்.

இன்றோ நாளையோ அடுத்த வாரமோ பேரவை கூடப்போவதில்லை. எனவே தடை விதிக்க வேண்டாம். விரைவில் பதில் மனுத்தாக்கல் செய்கிறோம். விளக்கம் அளிக்க விருப்பப்பட்டால் திமுக எம்எல்ஏ-க்கள் அவகாசம் கேட்கட்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்குகிறோம்”. எனத்தெரிவித்தார்.

வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “ஆகஸ்ட் 25-ல் தீர்ப்பளித்தவுடன், செப்டம்பர் 7-ல் உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவை காண்பிக்க கூடாது என அரசாணையில் இல்லை . மனுதாரர்கள் காண்பிக்கதான் எடுத்து வந்தார்கள் என்பதை தலைமை நீதிபதி உத்தரவிலும் தெளிவுபடுத்தி உள்ளது. நாளை (செப்.24) காலை 10:30ல்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்”. என உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி, “பேரவை உரிமைக்குழு நோட்டீசுக்கு இடைக்காலத் தடை, பேரவைக்குள் குட்கா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை, மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும். பேரவை தலைவர், செயலாளர், உரிமைக்குழு, உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க வேண்டும், மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என உத்தரவிட்டார்.