தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி, அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

முன்னாள் அதிமுக நிர்வாகியான விஜய நல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாகவும், இது தவிர அதிமுக கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இந்த “பணத்தை எல்லாம் பெற்றுக்கொண்டு பிறகு அரசு வேலையும் வாங்கித்தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக” முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் 15 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் தலைமறைவானதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர். அதே நேரத்தில் தான், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த வழக்கில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

அத்துடன், ராஜேந்திர பாலாஜி தென்காசி மாவட்டம் குற்றாலம் அல்லது கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அந்த 3 தனிப்படைகளும் அங்கு விரைந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், அவர் பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்து சென்று உள்ளது.

அதே நேரத்தில், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் 600க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கியமாக, “சினிமா பட பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தப்பித்ததாகவும்” போலீசார் தரப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டன. இது, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதை தடுக்கும் விதமாக, விமான நிலையங்களுக்கு இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல் துறை தரப்பில் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.