தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் 2 வது அலை தீவிரமாகவே பரவி வருகிறது. அந்த தாக்கம் தமிழகத்தில் தற்போது எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு முதலில் பிறப்பிக்கப்பட்டது. 

ஆனால், பலரும் இந்த ஊரடங்கு விதிகளை மதிக்காமல் தேவையின்றி வெளியே ஊர் சுற்றித் திரிந்ததால், கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 24 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு உத்தரவு ஒரு வாரத்திற்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமலுக்கு உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பானது கணிசமாக ஒரளவிற்கு சற்று குறைந்து வருகிறது என்று தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது இன்றைய நிலவரப்படி 31 ஆயிரத்து 79 பேருக்கு மட்டுமே பரவியிருக்கிறது. இதனால், தமிழகத்தில் 7 வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்திருக்கிறது.

ஆனால், தமிகழத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வண்ணமே உள்ளன. அதன்படி, கொரோனாவால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக உயர்ந்து உள்ளது.

இப்படியான நிலையில், “தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம், வருவாய்த்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழகத்தில் கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை” என்று, கவலைத் தெரிவித்தார்.

இந்நிலையில், “தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அத்துடன், “முழு ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் யாரும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழி காட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்ட 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு  தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்றும், தெரிவித்த உள்ளார்.

தற்போது உள்ள ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி உடன் முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்“ என்றும், முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

எனினும், “பொது மக்கள் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும்
நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்“ என்றும். அவர் குறிப்பிட்டார்.

மேலும், “பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்“ என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

குறிப்பாக, “பொதுமக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.