கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டதட்ட 586 நாட்களுக்கு பிறகு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேற்று முன் தினம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்று உற்சாகமாக வரவேற்றார்கள். 

ஆனாலும், பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றைய தினம் கூட கடலூரில் தொடர் கன மழையால் அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, தமிழக வங்க கடல் ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.  

அதாவது, தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இவை, அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இதன் காரணமாகவே, “தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்” என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

என்றாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்து செல்வதில் சிரமமாக இருந்தது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு நேற்றைய தினம் விடுமுறை அறிவித்தனர்.

அதன் படி,  நேற்று முன் தினம் முதல் விடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் நேற்யை தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதே போன்று மழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இவற்றுடன், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டது.

அத்துடன், குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் நேற்று முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நள்ளிரவு முதல் தற்போது வரை பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இந்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.