“கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில், அங்கு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்து உள்ளதாக” ஊர்மக்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளனர்.

சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, அங்குள்ள இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி நிலவி உள்ளது. அப்போது, நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர பாண்டியன் என்பவரும், இஸ்லாமிய சமூக வேட்பாளரான முகமது இப்ராஹீம் உசைன் என்பவரும் போட்டியிட்டனர். இந்த போட்டி தீவிரமடைந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில், பலரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

சமுதாய ஒப்பந்தம்

இந்த தேர்தலில், இஸ்லாமிய சமூக வேட்பாளருக்கு ஆதரவு தந்தமைக்காக, அங்குள்ள ஆதிதிராவிட சமூக மக்களின் குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. எனினும், அந்த தேர்தலில் 420 வாக்குகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய சமூக வேட்பாளர் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவர் ஆனார். வீரசிகாமணி என்கிற அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் துணைத் தலைவர் ஆனார். இதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி இரு சமூக மக்களுக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். அதன் பிறகு 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

சுழற்சி முறையில் தேர்வு

இதனையடுத்து, 1986 ஆம் ஆண்டு காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி, டி.எஸ்.தாவுது, இப்ராஹீம், சகாய ராணி ஆகியோர் முன்னிலையில், அந்த ஊரில் உள்ள அனைத்து சமூகத்தினரின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, “ஒரு முறை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அடுத்த முறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்” என, அப்போது ஒருமனதாக அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அது தான், தற்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்

மேலும், “கட்சி தேவையில்லை என்பதே” இந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது. இந்த பாணியிலேயே அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினர், தங்களுக்குள் பேசி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்கின்றனர். 

இந்த ஒப்பந்தத்தின்படியே 1986 ஆம் ஆண்டு பெரியசாமி (நாடார்) தலைவராகவும், வியாகுலம் பிள்ளை (கிறிஸ்துவர்) துணைத் தலைவராகவும் நிறுத்தப்பட்டனர். 

ஆனால், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நேரடியாக தலையிட்டு அதிமுக சார்பில் கந்து இக்பால் என்பவரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தினார். அப்போது, அனைத்து சமுதாய ஒற்றுமைக்கு எதிராக போட்டியிட்ட எம்.ஜி.ஆர் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கந்து இக்பால், டெப்பாசிட் இழக்கின்ற வகையில் அப்போது படுதோல்வி அடைந்தார் என்கிற ஒரு நிகழ்வும் அங்கு அரங்கேறி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 1986 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக அனைத்து சமுதாய ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்படுபவர்களே, கமுதியில் தலைவராகவும், துணைத் தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் இதுவரை தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர். 

அத்துடன், இந்த பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சி சார்பாக இல்லாமல், சமுதாய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுயேட்சைகளாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும், அப்துல் வஹாப் சகாயராணி என்ற திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தலைவர் வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். 

அதுவும், சமுதாய ஒற்றுமை ஏற்பட்டதன் காரணமாக வேறு எந்த அரசியல் கட்சியும் தேர்தலில் போட்டியிடாது, ஊர்கூடி தேர்வு செய்யப்படுவோர் கூட சுயேட்சை என்று தான் மனு செய்துள்ளனர். அந்த வகையில், சகாயராணி உட்பட 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தான், அங்குள்ள 14 வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வான சத்யா ஜோதி ராஜா என்பவர், அவர் சார்ந்த சமுதாய ஒற்றுமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டு சுயேட்சை வேட்பாளர் என்று தான் மனு செய்ய இருந்தார். 

ஆனால், கடைசி நேரத்தில் மேற்கண்ட நெறிமுறைக்கு புறம்பாக, அவர் பாஜகவின் கடிதம் கொடுத்ததால் பாஜக வேட்பாளர் என முன்னதாக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, “மதநல்லிணக்க ஒற்றுமையின் கீழ் தேர்வாகி கிடைத்த வெற்றியை மறைத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக பாஜகவினர் அந்த பகுதியில் தற்போது அலப்பறையில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்தை சிர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக அந்த ஊர் மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, “பல ஆண்டுகளாக சாதி, மத, அரசியல் மோதல்களை தடுக்கும் நோக்கில், பின்பற்றப்பட்டு வரும் இத்தகைய நெறிமுறையை சுயலாபத்துக்காக பாஜக மீறியதாகவும், இதனால் அந்த பகுதியில் மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும்” அப்பகுதி மக்கள் வேதனையையும், கவலையுமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும், தற்போதைய கமுதி பேரூராட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வான 11 பேரில் சகாயராணி உள்ளிட்ட 7 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் யாரும் தங்களது கட்சியை இதுவரை அடையாளப்படுத்தாமல் சுயேட்சை என்றே தங்களை அடையாளப்படுத்தி இருக்கும் சூழலில், கடைசி நேரத்தில் ஊர் விதிமுறைகளுக்கு புறம்பாக, பாஜகவின் கடிதம் கொடுத்து ஊர் மக்களை மோசம் செய்து ஏமாற்றிய சத்யா ஜோதி ராஜா என்பவர் மட்டும், தன்னை பாஜக வேட்பாளரா கூறி வருவது, அந்த பகுதி மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செய்தியானது, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தற்போது பரவி வரும் நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.