மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மேலும் அலங்காநல்லூரில் நாளை நடைபெற உள்ளது. இந்தாண்டு கொரோனா காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், பார்வையாளர்கள், மாடு பிடிவீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அதோடு மாடு பிடி வீரர்களும், காளைகளும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் இதுவரை இல்லாத முறையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு ஆன்லைனில் நடந்தது. அதன்படி 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 4 ஆயிரத்து 544 காளைகளும், 2,001 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்து இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து அதில் தற்போது பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பாலமேட்டில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு, காங்கேயம் பசுமாடும் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்க காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.