“மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்றும், போட்டி நடத்துவது குறித்து முதலமைச்சர் இன்று முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார்” என்றும், அமைச்சர் மூர்த்தி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக, வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் மதுரை அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக 110 கிராமங்களில் 350 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க தயார் படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள முகூர்த்தகால் நிகழ்ச்சியும் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. 

இவற்றுடன், வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டுன. இவற்றுடன், வாடிவாசல் அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளன.

மேலும், “அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு சொன்னால் அதன் படியே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்” என்றும், விழா குழுவினர் தெரிவித்து உள்ளதுடன், எந்த வகையிலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது என்று தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தான், மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்” என்று, தெரிவித்தார். 

“தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரானை கட்டுப்படுத்த முதலமைச்சர் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

மேலும், “மதுரையில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன” என்றும், அவர் தெரிவித்தார். 

“மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்றும், அதனால் மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு அளித்து வருகிறோம்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும்” என்றும், அவர் உறுதி அளித்தார். 

“ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும், ஜல்லிக்கட்டு போட்டியை விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது குறித்து அறிவிப்பை முதலமைச்சர் இன்று வெளியிடுவார்” என்றும், அமைச்சர் மூர்த்தி கூறினார்.

“முதலமைச்சரின் அறிவிப்பு வெளியான உடன் போர்க்கால அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு தொடங்கப்படும் என்றும், கடந்த காலங்களில் போட்டி நடைபெறலாம் என்று அறிவித்த 24 மணி நேரத்தில் மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.