“அரசுப் பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது” என தலைமைச் செயலாளர் இறையன்பு IAS அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13ஆம் தேதி திங்கட் கிழமை முதல் திறக்கப்பட இருக்கின்றன.

அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்எ ன்று, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. 

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு IAS, சில முக்கிய உத்தரவுகளை தற்போது பிறப்பித்து உள்ளார். 

இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு IAS,பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், “2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகததில் பள்ளிகள் திறப்பதால், தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க, தூய்மையான முறையில் பள்ளிகளை பராமரிக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மைதானங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் சேர்ந்து இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

“இந்த பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சேர்ந்தவர்களை ஈடுப்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அவர்களிடம் எவ்விதமான நிதி வசூலையும் பெற்று இப்பணிகளை மேற்கொள்ளகூடாது” என்றும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

அதே போல், “அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், ஆய்வரங்குகளில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், கழிவறைகள் நல்ல முறையில் தூய்மையாக இருக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர் என்றும், இதனால் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்பாக, “பள்ளிகளில் உள்ள குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும் என்றும், பள்ளி கட்டிடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மை படுத்தப்பட்டு வெள்ளையடித்து வைத்திருக்க இருக்க வேண்டும்” என்றும், தலைமை செயலாளர் இறையன்பு IAS வலியுறுத்தி உள்ளார்.

முக்கியமாக, “பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பல தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே” என்றும், அவர் சுட்டிகாட்டி உள்ளார். 

“பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள் என்றும், இது போன்று சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்” என்றும், தலைமை செயலாளர் இறையன்பு IAS தெரிவித்து உள்ளார். 

இதனிடையே, மாநில கல்வி கொள்கை தொடர்பாக வரும் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.