“ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக” அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

2021 ஐபிஎல் 14 வது சீசனில் சொல்லி அடித்த தோனி தலைமையிலான கர்ஜித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்கள், 4 வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதித்துக் காட்டியது. 

சென்னை அணியின் இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணியை வீழ்த்தியதோடு கடந்த 9 வருட தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொண்டார் கேப்டன் தோனி என்றும், புகழராம் சூட்டப்பட்டது. 

இப்படியாக, ஐபிஎல் கோப்பையை வெற்றி கோப்பையாக வென்று கர்ஜித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்களைச் சென்னை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

அத்துடன், சென்னை அணியின் வெற்றியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று, தன்னுடைய டிவிட்டரில் வாழ்த்துக்களைக் கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழு சார்பில் ஐபிஎல் கோப்பையைச் சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. 

அப்போது, முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள ஏழுமலை வெங்கடாசலபதி முன் வைத்து பூஜை செய்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீனிவாசன், “திருப்பதி வெங்கடாசலபதி முன் ஐபிஎல் கோப்பையை வைத்து வழிப்படுவதில் பெருமை அடைகிறேன் என்றும், எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75 வது வருடத்தில் வெற்றி கோப்பையை தோனி பெற்று கொடுத்து உள்ளார் என்பதில் பெரும் கிழ்ச்சி அடைகிறேன்” என்றும், கூறினார்.

மேலும், “தற்போது நடைபெறும் உலக கோப்பை டி20 உலக கோப்பை போட்டி முடிந்ததும், தோனி சென்னை வருவார் என்றும், தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்” என்றும், தெரிவித்தார். 

குறிப்பாக, “முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும்” அவர் கூறினார்.

முக்கியமாக, “இந்தாண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சிறப்பான அணி என்றும், தோனி மெண்டராக உள்ளதால், நிச்சயம் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும்” என்றும், அவர் தெரிவித்தார்.

மிக முக்கியமாக, “சிஎஸ்கே இல்லாமல் தோனி கிடையாது என்றும், தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி கிடையாது என்றும், முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன் கூறினார்.