கொரோனா தாக்கம் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
By Aruvi | Galatta | 05:20 PM
கொரோனா தாக்கம் எதிரொலியாக இந்தாண்டுக்கான ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் தேதி மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
13 வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர், வரும் 29 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மும்பையில் நடைபெற இருந்த முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருந்தன. இதற்கான பயிற்சியில் ஐ.பி.எல். வீரர்கள் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உலகையே அச்சுருத்தி வந்த கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியது. இதனால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 வரை, மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதனால், வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15 வரை, ஐ.பி.எல்.லில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியானது.
மேலும், நாளை நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூட்டத்தில், ஐ.பி.எல். போட்டிகளைக் குறிப்பிட்ட 29 ஆம் தேதியே தொடங்கலாமா? அல்லது மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக, பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாளை நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூட்டத்திற்கு, ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.