“அழகிகள் எல்லாம் இளம் பெண்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? திருமணமாகிவிட்டால் அந்த குமாரிகள் எல்லாம் அழகிகள் இல்லையா?” என்ற ஏக குரல்கள் பலரது உள்ளத்திலும் கேள்விகளாக உதிர்த்த ஒன்றுதான்!

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாகவே வந்து பதில் சொல்கிறார் “மிசஸ் இந்தியா அழகிப் பட்டம்” வென்ற சென்னை பெண் பிளாரன்ஸ் ஹெலன் நளினி.

Florance Helen nalini

மனநல நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர் என்று, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருபவர் தான் சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி.

இந்த நிலையில் தான், மும்பையில் தற்போது நடைபெற்று முடிந்த “தி இண்டர்நேசனல் கிளாமர் பிராஜக்ட்” நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி, “மிஸஸ் இந்தியா 2021” பட்டத்தை வென்று, சாதித்து காட்டியிருக்கிறார்.

அத்துடன், வரும் ஆண்டு அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க பிளாரன்ஸ் ஹெலன் நளினி தேர்வாகியியும் இருக்கிறார்.

அதாவது, “பெண்கள் அதிகாரமளிப்பதற்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில்” அமெரிக்க - இந்திய கூட்டு முயற்சியில் மிஸ் இண்டர்நேஷனல் வோர்ல்ட் இந்தியா கிளாசிக் அழகிப் போட்டி நடைபெற்றது. 

இதில், இந்தியா முழுவதில் இருந்தும் சுமார் 3000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து  கொண்டனர். இந்தப் போட்டியானது, பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இறுதிப் போட்டியானது மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில், சென்னையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இந்த போட்டிக்கே புதியவராக அறிமுகம் ஆனார். 

மேலும், மாடலிங் துறையில் முற்றிலும் அனுபவமற்ற பிளாரன்ஸ் ஹெலன் உடன் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்கள், மாடலிங் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருந்தனர். 

என்றாலும், எந்த அனுபவமும் இல்லாமல் புதியவராக அறிமுகமான பிளாரன்ஸ் ஹெலன், அனைத்து கட்ட போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் 47 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

அதில், 2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் இண்டர்நேஷனல் வோர்ட்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்று, அனைத்து தரப்பினரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தி அசாத்திய சாதனை படைத்திருக்கிறார் பிளாரன்ஸ் ஹெலன். 

அத்துடன், இதே போட்டியில் Glamourous acheiver என்ற துணைப் பிரிவிலும் கூடுதலாக மற்றொரு பட்டத்தையும் வென்று அசத்திக்காட்டியிருக்கிறார் பிளாரன்ஸ் ஹெலன்.

இந்தப் போட்டியின் ஒரு அங்கமாக, ஏழை குழந்தைகளுக்களின் கல்விக்காக போட்டியாளர்கள் நிதி திரட்ட வேண்டும் என்பதால், இது வெறும் அழகிப் போட்டியாக மட்டுமே இல்லாமல், சில சமூக நோக்கங்கங்களுக்காகவும் இந்த போட்டியனது கவனம் பெற்றது. 

அதன்படி, இந்த உன்னதமாக நோக்கத்தை உத்வேகத்துடன் எடுத்துக் கொண்ட அவர், கிட்டதட்ட 366 பேரிடம் நிதி திரட்டி, ஏழை பெண் பிள்ளைகளின் கல்விக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்.

மேலும், வரும் ஆண்டு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெறும் சர்வதேச போட்டிக்காக தயாராகி வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி இது குறித்து பேசும்போது, “எனது சொந்த ஊர் கோவை. இருப்பது நான் சென்னையில் தான் இருக்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது அதிக ஆர்வம். 

Florance Helen nalini

எனது குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண் நான்தான். நான் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிஎஸ்சி லைஃப் சயின்ஸில் பட்டம் பெற்றேன். நான் அந்த பட்டம் பெறுவதற்கு நிறைய சாவல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. என் படிப்பை நிறுத்தும் சூழ்நிலை எல்லாம் எனக்கு அப்போது வந்தது. அப்போது, படிப்பதற்காக நான் மற்றவர்களுக்கு கல்வி பயிற்சி கொடுக்க தொடங்கினேன். 

அதில் வரும் வருமானத்தை வைத்து தான், நான் எனது மேல்படிப்பையும் குடும்ப பிரச்சனைகளையும் சமாளித்தேன். அப்போது எனக்குள் ஒரு ஆசை, அனைத்து படிப்புகளையும் படிக்க வேண்டும் என்று.. அதன்படி, இன்று வரை நான் படித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

தற்போது, உளவியலில் ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறேன். கல்வி மீதான எனது ஆர்வம் என்னை ஒரு Edupreneur ஆக்கியிருக்கிறது.

தற்போது நான் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்கின்றேன். நான் இது வரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு படிக்கவும், எழுதவும், பேசவும் கற்று தந்திருக்கிறேன்.

இவற்றுடன், உளவியல் துறையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உளவியல் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு பட்டம் பெற்று இருக்கிறேன்.

குறிப்பாக, என்னை இந்த போட்டியில் பங்கு பெற வற்புறுத்தியது எனது இளைய மகள் சரிஹா தான். நான் சாதாரண எண்ணத்துடன் இந்த போட்டிக்குள் நுழைந்தாலும், பல விதமான சுற்றுகளை கடந்து வந்து தான் சாதித்து காட்டியிருக்கிறேன். ஷ

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் 3 ஆயிரம் பேர் பங்கு பெற்றனர். அதிலிருந்து நாங்கள் 52 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழ்நாடு சார்பாக நான் ஒருத்தி மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். இந்த போட்டியின்போது நான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து மீள மன தைரியத்தை காட்டிலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தியதாலே, மீண்டு அதே உத்வேகத்துடன் எழுந்து வந்து இந்த போட்டியில் கடைசி வரை கலந்துகொண்டு வெற்றி பெற முடிந்தது.

இந்தப் போட்டியின் மூலம் நான் நிறைய மனிதர்களை சந்தித்தேன். ஒவ்வொருவரிடம் இருந்தும் எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. எனக்கு இதற்கு முன்னால் மாடலிங் துறையில் எந்த அனுபவமும் கிடையாது என்று சொன்னால், யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆனால், அங்கு பங்கு பெற்றவர்கள் பலரும் நிறைய அனுபவம் பெற்றவர்கள்தான். 

இந்தப் போட்டியில் உள்ள சமூக விழிப்புணர்ச்சிக்கான சுற்றில், நான் Dream and Believe foundation  மூலம் படிக்கும் திறமை இருந்தும், பயில முடியாத குழந்தைகளுக்கு அதிக அளவில் நிதி திரட்டி அவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்க வழிவகை செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நான் ஆல் லேடீஸ் லீக் என்ற அமைப்பில் தமிழக துணைத் தலைவராக இருக்கின்றேன். இந்த அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை ஒன்றிணைப்பது, அவர்களுக்கான வாய்ப்புக்களை தேடி தருகிறோம். 

இவற்றுடன், மகளிர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மன்றத்தில் கவுன்சில் உறுப்பினராகவும் (WICCI) உள்ளேன். 

Florance Helen nalini

பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள். எப்பொழுதும் நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஒரு நாள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள். உங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் இலக்கை அடைவதற்கு நீங்கள் தான் ஓட வேண்டும். உங்களின் மீது நம்பிக்கை வைத்து வாருங்கள், ஒன்றாக முன்னேறலாம்” என்று, திருமணம் ஆன பிறகும் இந்தியா கிளாசிக் அழகிப் பட்டம் வென்று சாதித்து காட்டிய பிளாரன்ஸ் ஹெலன் நளினி, பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தீ மூட்டியிருக்கிறார்.