“பாலியல் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாகரிகத்தையும், பண்பாட்டையும் பற்றிப் பேசுவதில் எந்தப் பெருமையும் இல்லை” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருவதால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ள நிலையில், அது தொடர்பான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் அவர் வழங்கி உள்ளார். 

அதன்படி,

-  குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் இருக்கிறது. 

- எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால், 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். புகார் குறித்த ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.

- சென்னை டிபிஐ அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கல்வித் தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இதில் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்கள். பாலியல் வன்முறை தொடர்பாக மாணவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு, அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

- குழந்தைகளின் பாதுகாப்பினை பள்ளிகள் உறுதி செய்ய சுய தணிக்கைப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது.

- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் இணையதளக்குற்றப்பிரிவு காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக நிதியம் ஒன்று செயல்படுகிறது.

- போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட்டு வருகின்றன. 

- மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 

- மேலும் 4 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்களை நிறுவ ஆணையிடப்பட்டு உள்ளது. அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர உத்தரவிட்டு உள்ளேன்.

- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

- குழந்தைப் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்படுவதற்கு, இந்தியாவிலேயே முதன் முதலாகத் தமிழ்நாடு மாநில குழந்தை பயிற்சி மையம் யுனிசெப் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.

- குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

- தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண் 14417 குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

- சில நாட்களுக்கு முன்னால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கான கொள்கை - 2021 என்ற கொள்கைக் குறிப்பேட்டை தலைமைச் செயலகத்தில் நான் வெளியிட்டேன். 

- ஒவ்வொரு குழந்தையையும் அனைத்துவிதமான சுரண்டல்களில் இருந்தும் வன்முறைகளில் இருந்தும் காக்கும் அறிக்கையாக அது அமைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்காக பாதுகாப்பு அதில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

- அரசு காட்டும் அதே அக்கறையை பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் காட்ட வேண்டும். தங்களிடம் பயிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தாக வேண்டும்.

- பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோடு எளிமையாகவும் இனிமையாகவும் பழக வேண்டும். ஒரே வீட்டுக்குள் தனித்தனித் தீவுகளாக வாழ வேண்டாம்.

- அன்புக் குழந்தைகளே, உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

- ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார் என்று பொருள்.

- “வாழ்ந்துதான் போராட வேண்டும். வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே, யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக உங்கள் சகோதரனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம்” என்று முதலமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கி ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.