தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த மண்டலத்தால், தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

c1

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக நாளை மதியம் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 16 மாவட்டங்களுக்கும் ’ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

c2

அதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

இதனால், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.