“கொரோனா 3 வது அலைக்கு முன்பே சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக” அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாட்டில் கொரோனா 2 ஆம் அலை தொற்று பரவலானது, கடந்த மே மாதம் மீண்டும் புதிய உச்சத்தில் இருந்து வந்தபோது, தமிழகத்தில் அப்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அத்துடன், கொரோனா 2 வது அலையின் பாதிப்பானது கடந்த மே மாத காலகட்டத்தில் ஒரு நாள் பாதிப்பானது 30 ஆயிரத்தையும் கடந்து காணப்பட்டது. இதனால், மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிப் போனார்கள். 

பின்னர், தொடர்ச்சியான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா 2 வது தொற்று சற்று குறைய தொடங்கிய நிலையில், தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குகளில் மெல்ல மெல்ல பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. அத்துடன், கடந்த சில வாரங்களாக அதிக அளவிலான தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்து வந்தது.

அதாவது, சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பானது, மெல்ல மெல்ல அதிகரித்துக் கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்தைத் தொட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பாதிப்பானது, மீண்டும் கட்டுக்குள் வந்தது. 

    பின்னர், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு 200 க்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் சென்னையில் பாதிக்கப்பட்டு வந்ததாகப் புள்ளி விபரங்கள் பதிவாகின. 

    மேலும், சென்னையில் 2 வது அலையால் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தொற்று உயர ஆரம்பித்த நிலையில், கடந்த மே மாதத்தில் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பானது 5 ஆயிர் பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கிய எண்ணிக்கையானது, கடந்த ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 500 க்கு கீழும், அதன் தொடர்ச்சியாக ஜூலை மாத மத்தியில் 200 க்கு கீழும் மீண்டும் குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தான், சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து உள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில், கொரோனாவுக்கு இது வரை 1,675 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளன. 

    முக்கியமாக, சென்னையில் 8,318 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அதன் படி, சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது நேற்று 1,627 ஆக இருந்தது. அதற்கு முன் தினமான ஜூலை 31 ஆம் தேதி
    கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,569 ஆகவும், ஜூலை 30 ஆம் தேதி 1,508 ஆகவும் பதிவானது. 

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து தற்போது 1,675 ஆக உயர்ந்திருக்கிறது. 

    குறிப்பாக, சென்னை உட்பட தமிழகத்தில் இன்னும் கொரோனாவின் 3 வது அலை தொடங்காத நிலையில், சென்னையில் சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் திடீரென்று அதிகரித்து வருவதாக ரிப்போர்ட் வெளியாகியிருப்பது, சென்னை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    முக்கியமாக, சென்னையில் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 5,38,326 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 5,28,333 லட்சம் பேர் இதுவரையில் குணமடைந்து உள்ளனர். 

    இதனிடையே, சென்னையில் மீண்டும் அதிகரித்திருக்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, நேற்று முதல் சென்னையில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.