பாலியல் வழக்கில் சாமியார் நித்யானந்தாவை போன்றே, சிவசங்கர் பாபாவும் அந்தர் பல்டி அடிக்கும் வகையில் வாக்குமூலம் அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை பிடிக்க, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை டெல்லியில் பதுங்கியிருந்த போது, அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அப்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சிவசங்கர் பாபா மீதான இந்த பாலியல் வழக்கில், முன்னாள் மாணவிகள் 18 பேர் தனித்தனியாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும், நீதிமன்றத்தில் போலீசார் கூறினார். 

இவற்றுடன், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன.

அத்துடன், சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்த நிலையில், அந்த ஜாமீன் மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை” என்று, சிவசங்கர் பாபா அந்தர் பல்டி அடித்திருந்தார்.

குறிப்பாக, “ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்குத் தான் சென்று வந்ததாகவும்” சிவசங்கர் பாபா, அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து, இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவும் அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. 

சமீபத்தில் இந்த வழக்கில் 300 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகையைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதில் 40 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இது வரை சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

மிக முக்கியமாக, “கடந்த 2011, 2012 2013 ஆம் ஆண்டுகளில் படித்த சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகளை, சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது” சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது.

அத்துடன், ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 2 குற்றப்பத்திரிக்கை தயாராகி விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இவர் மீதான அடுத்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா தற்போது வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாக்குமூலத்தில் “தான் ஆண்மையற்றவர்” என சிபிசிஐடி போலீஸாரிடம், அவரே கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

குறிப்பாக, “ஆண்மை இல்லாத நான் எப்படி இது போன்று பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டிருக்க முடியும்?” என்றும், அவர் சிபிசிஐடி போலீசாரிடம் பதில் கேள்வி கேட்டதாகவும்” தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மிக முக்கியமாக, சிவசங்கர் பாபா மீதான இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக விசாரணைக்கு வந்த போது, “சிவசங்கர் பாபாவிற்க்கு ஒரு மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும்” அதில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான், சிவசங்கர் பாபா மீண்டும் “நான் ஒரு ஆண்மையற்றவர்” என்று, கூறியிருக்கிறார்.

இதே போல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்தியானந்தாவும் “நான் ஒரு ஆண்மையற்றவர்” என்று, கடந்த காலத்தில் வாக்குமூலம் அளித்தார். அது போலவே, சிவசங்கர் பாபாவும் தற்போது நித்யானந்தா பாணியில் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.