திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில், அந்த 10 ஆம் வகுப்பு சிறுமி, வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அத்துடன், “சிறுமி மாயமானது தொடர்பாக ஒருவேளை சிறுமி காதலித்து யாரும் ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்களோ” என்று சந்தேகப்பட்டனர்.

இதன் காரணமாக, காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி, சிறுமியின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
 இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம், மாயமான சிறுமியை போலீசார் ஆஜர்படுத்தினர். 

அத்துடன், காணொலி காட்சி மூலம் போலீசார் நீதிபதிகளிடம் பேசும் போது, “மாயமான சிறுமி, தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றியபோது, ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள ஒருவரை, அந்த சிறுமி திருமணம் செய்து கொண்டார்” என்றும், தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், “பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் இளம் பெண்கள், அடுத்தடுத்து கணவன் என்று வருபவர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதைக் காணமுடிகிறது” என்று வேதனையோடு குறிப்பிட்டனர்.

மேலும், “சில ஆண்கள் தங்களுக்கு ஏற்கனவே ஆன திருமணமானதை மறைத்து, இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றும், கண்டிப்புடன் நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, “பெற்றோரின் சம்மதம் இல்லாமல், இது போன்று வீட்டை விட்டு வெளியேறும் இளம் பெண்கள், ஏற்கனவே திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இது வரை எத்தனை வழக்குகள், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், திருமணமானதை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அத்துடன், இது தொடர்பாக “அடுத்த வாரம் பதிலளிக்கும் படி” அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையையும் ஒத்தி வைத்தனர்.

இதனால், தமிழகம் முழுவதும் ஏற்கனவே திருமணமான ஆண்கள், எத்தனை பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பான புகார்களைத் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கத் தொடங்கி உள்ளனர். ஒருவேளை இது போன்ற வழக்குகளில் இதுவரை தீர்ப்பு மற்றும் தண்டனை வராத பட்சத்தில், இனி அதற்கான தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டால் முன்பை விட மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், குற்றம் செய்த ஆண்கள் பீதியடைந்து உள்ளனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பட்டதாரி இளம் பெண்ணை காதல் என்ற பெயரில் கடத்தியதாகக் கூறி, ஏற்கனவே திருமணமான இளைஞரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.