மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

bipin rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

இந்நிலையில் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 2 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி  ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 13 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.  மேலும் சம்பவ இடத்திற்கு தற்போது விரைந்து செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.