சென்னையில் இன்று மாலை தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து நாளை அதி கனமழையாகும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

balachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

அதனை தொடர்ந்து  மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும்,  நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:  தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து  தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நாளை நிலவ கூடும்.  இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் மேலும்   சென்னையில் இன்று மாலை தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து நாளை அதி கனமழையாகி 19ம் தேதி படிபடியாக குறையும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.