காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறும்போது, அதிதீவிர கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 3 நாட்களாக பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை, தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரத்தில், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மின்சார, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கடந்த 24 மணி நேரத்தில் 38 மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியாக 16.84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக 70.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர், பவானிசாகர், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும் போது 20 சென்டி மீட்டர் மேல் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய தினம் சென்னையில் மழை குறைவாக இருக்கும் என்பதால் மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மழை அதிமாக பெய்யும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 குழுக்கள், மதுரையில் 2, திருவள்ளுவரில் 1, செங்கல்பட்டில் 1 குழு என தேசிய பேரிட மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.

மின்சாரத்தால் உயிரிழப்பு வரக்கூடாது என எச்சரிக்கையாக கையாள்கிறோம். மழை மற்றும் நிவாரண உதவிகலை கண்காணிக்க கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை காலம் முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும். சாய்வான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

k2

கடலுக்கு சென்றுள்ள மீணவர்கள் அனைவரும் இன்று கரை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுத்து மேடான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் மழையால் 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 169 முகாம்களில் 16 முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை பெய்தால் எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.

10 வருட ஆட்சியில் ஏரி மற்றும் கால்வாய்களை முறையாக தூர்வாரி, கரைகள் அமைத்திருந்தால் மழைநீர் சூழ்ந்திருக்காது. மற்ற கட்சிகள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து விளக்கிவிட்டு, அதனை தி.மு.க. அரசு தொடர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினால், நியாயம் இருக்கும். 

ஆனால் எவ்வித பணிகளும் செய்யாமல் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டு குறை கூறுவதற்கு எதிர்கட்சி தலைவர் தேவையில்லை’ இவ்வாறு  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.